அமைச்சர் டக்ளஸ் மீண்டும் வலியுறுத்து
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடல் வளங்களை அழிக்கும் எவ்விதமான நடவடிக்கைகளையும் அனுமதிக்கப் போவதில்லையென, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள தமிழ்நாடு அரச சார்பற்ற நிறுவனத்தின் மீன்பிடி முகாமைத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் விவேகானந்தன் நேற்று (25) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அமைச்சு அலுவலகத்தில் சந்தித்த போதே,
அமைச்சர் இவ்வாறு திட்டவட்டமாக மீண்டும் வலியுறுத்தினார். இந்தச் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சர்,
"இலங்கை கடற்பரப்புகளில் இந்திய மீனவர்களின் அத்துமீறி எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறையை சுமுகமான முறையில் தடுத்து நிறுத்த பல சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதெல்லாம், தமிழ்நாட்டு மீனவர்கள் கால அவகாசம் கேட்டே காலத்தை கடத்தியிருக்கின்றனர்.
இவ்வாறு சுமார் 15 வருடங்கள் கடத்தப்பட்டிருக்கின்றது. ஆனாலும், தொடர்ந்து அத்துமீறல்களும் வள அழிப்பும் தொடர்வதால், எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது" என்றார்.
இந்தச் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த விவேகானந்தன்,
"இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புகளில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவது தவறு என்பதை துணிந்து சொல்லும் தைரியம் தமிழ்நாட்டில் எவருக்கும் இல்லை. இவ்விவகாரத்தில் நியாயமான தீர்வொன்றைக் காண்பதற்கு தானும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளேனென்று தெரிவித்ததுடன், எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கைக்கும் கச்சதீவு விவகாரத்துக்கும் தொடர்பில்லை. சில தரப்புகள் அரசியலுக்காக இவ்விரு விடயங்களையும் தொடர்புபடுத்தி பேசுகின்றனர். எனவே, அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பாக இரு தரப்பிலும் கலந்துரையாடி நியாயமான தீர்வுக்கு வருவதற்கு முயற்சிக்க வேண்டும். இரு தரப்பினரும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே தமது முன்னெடுப்புகளின் நோக்கமாகும்" என்றார்.
Add new comment