2022 O/L பரீட்சை விண்ணப்ப முடிவுத் திகதி இன்று

- விண்ணப்ப முடிவுத் திகதி எக்காரணம் கொண்டும் நீடிக்கப்படாது

2022 க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பிப்பதற்கான கால எல்லை இன்றுடன் (28), நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 01ஆம் திகதி முதல் இதற்கான விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில், அதற்கான இறுதித் திகதி இன்றுடன் நிறைவடைகிறது.

ஒன்லைன் ஊடாக மாத்திரம் இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளதோடு, இதற்கான விண்ணப்பங்களை இன்று நள்ளிரவு 12.00 மணி வரை சமர்ப்பிக்க முடியுமெனவும் அவர் அறிவித்திருந்தார்.

அத்துடன் விண்ணப்ப முடிவுத் திகதி எக்காரணத்தைக் கொண்டும் நீடிக்கப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய, Online முறை மூலம் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk அல்லது onlineexams.gov.lk/eic அல்லது உத்தியோகபூர்வ கையடக்கத்தொலைபேசி செயலியான 'Exams Sri Lanka' (Android | iOS) ஊடாக, அறிவுறுத்தல்களை பின்பற்றி விண்ணப்பிக்கலாமென திணைக்களம் அறிவித்துள்ளது.

அரசாங்க பாடசாலைகளில், அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள User Name மற்றும் Password மூலம் குறித்த இணையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தனிப்பட்ட பரீட்சார்த்திகள் மேற்படி இணையத்தளத்தில் தங்களது தே.அ.அ. இலக்கம் உள்ளிட்ட விபரங்களை வழங்கி பதிவு செய்து கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதுடன், அதன் அச்சுப்பிரதியை பெற்று உரிய சந்தர்ப்பங்களில் சமர்ப்பிப்பதற்காக தம்வசம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் காணப்படுமாயின், பரீட்சைகள் திணைக்களத்தை பின்வரும் தொடர்பாடல் வசதிகள் மூலம் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொலைபேசி இலக்கம்: 0112785922/ 0112784208/ 0112784537
தொலைநகல்: 0112784422
மின்னஞ்சல்: [email protected]


Add new comment

Or log in with...